மலை வாழ் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீடு,கவுசிகா நதி நீர் வழிப்பாதையை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இலக்கு!! மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு!

மலை வாழ் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீடு,கவுசிகா நதி நீர் வழிப்பாதையை    மீட்டெடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக 176 ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சின் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் 3201 செயல்பட்டு வருகிறது. கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான  புதிய ஆளுநராக கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் ஜூலை 1 ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ள நிலையில்,வரும் ஆண்டில் தமது செயல்பாடுகள் குறித்து,செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொச்சின், மூவாட்டுபுழா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள 176 ரோட்டரி சங்கங்களின் கூட்டு அமைப்பான 3201 மாவட்ட ஆளுநராக தாம்,பொறுப்பேற்க உள்ள விழாவில்,இந்த 176 ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதிகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரோட்டரி சங்க பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், கலந்து கொள்ள உள்ளதாக கூறினார். 

சேவை திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறிய அவர்,குறிப்பாக,  நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தோடர் இன மலைவாழ் மக்களுக்கு இலவசமாக  வீடு கட்டி தருவது, கொங்கு மண்டலத்திற்கு முக்கிய நீராதாரமான  கோவையில் உள்ள கெளசிகா நதி வழித்தடத்தை  மீட்டு எடுப்பதில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.இதனை கவுசிகா மீட்பு குழுவினரிடம் இணைந்து செய்ய உள்ளதாக கூறினார்.

அடுத்த வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,இது குறித்த விழிப்புணர்வை  மாணவ பருவத்திலேயே ஏற்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார். எனவே சைபர் கிரைம் குறித்த தமிழ்,மலையாளம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட சைபர் சேம்பியன்ஸ் எனும்  கையேடுகளை தயாரித்து பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளிடையே வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நான்காவது திட்டமாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள  கல்லூரி  மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் இதே போல பல்வேறு திட்டங்களை ரோட்டரி சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தொடர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments