சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கம்!!

சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி இன்று  கோவை கொடிசியா   வளாகத்தில் துவக்கியது. இதனை  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் குறித்த கண்காட்சி துவங்கியது. சுமார் 1500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்க படும் இக்கண்காட்சியின் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டியும் குத்துவிக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து அனைவரது மத்தியிலும் பேசிய, தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் கூறுகையில், நாட்டில் ஜவுளி என்பது மிக முக்கியத்துவத்தில் ஒன்றாக உள்ளது. அத்தகைய ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த விற்பனையில் 3சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், 4 முதல் 6 சதவீகிதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிக்க ஜவுளி தொழில் துறையினர் செலவினம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜவுளி தொழில்துறையினருக்கு ஒரே கூரையின் கீழ் அனைத்து இயந்திரங்களும் கிடைக்கும் வகையில் இன்று இங்கு  சர்வதேச அளவில் கண்காட்சி நடத்தப்படுகின்றது. குறிப்பாக உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்கிவிப்பதும் நோக்கமாக கொண்டு இந்த கண்காட்சி காட்சிப்படுத்த பட்டுள்ளது என்றார். 

இந்த கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி  குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் மேற்குவங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் டையூ, தாத்ராநகர், ஹாவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஜப்பான், சீன நாடுகளை சேர்ந்த 240 ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளதாக  தெரிவித்தார்.

மேலும் இந்த கண்காட்சியின் மூலம் ரூபாய் 1500 கோடிக்கு மேல்  வர்த்தகம் நடைபெறும் எனவும் சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இக்கண்காட்சியை கண்டு ரசித்த கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது,

தொழில் துறை வளர வேண்டும், தொழில் துறை வளரும் பட்சத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், உற்பத்தி திறன் அதிகரிக்கும், மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவே இது மாதிரியான கண்காட்சிகள் நடத்துவது எதிர்கால தொழில் துறைக்கு நல்ல தொடக்கம் என்றார். மேலும் தொழில் துறையினர் தற்போது சந்தித்து வருகின்ற மின்கட்டண உயர்வு, சிறு குறு உற்பத்தியாளர்களின் மூலதன தளவாட பொருட்கள் விலை உயர்வு, ஆள் கூலி, மத்திய மாநில அரசு விதிக்கும் வரி குறித்து பல்வேறு கோரிக்கைகளை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். 

துறை சார்ந்த பிரச்சினைகளை அதிகாரிகளிடம் பேசி என்னேன்ன வகையில் தீர்வு கான வேண்டுமோ அதனை நிச்சயம் செய்து தொழில் துறையை மேம்படுத்த பாடுபடுவேன் என்றார். மேலும் தொழில் துறையின் வளர்ச்சிக்காக தொழில் துறையினர் தன்னை வார நாட்களில், 24 மணி நேரமும் தன்னை அனுகலாம் என்று கூறினார். 

இந்த கண்காட்சியில் சைமா துணை தலைவர்கள் துரை பழனிசாமி, கிருஷ்ணகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments