புது பொலிவு பெறும் 'இந்தியன் டெரைன்' 2024-25க்குள் கூடுதலாக நாடு முழுவதும் 30 கிளைகளை திறக்க திட்டம்!!!

ஆண்களுக்கான பார்மல்ஸ் & ஸ்மார்ட் கேசுவல்ஸ் சட்டைகள், டி- சர்ட் மற்றும் ஜீன்ஸ் வகை ஆடைகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான 'இந்தியன் டெரைன்' கோவையில் உள்ள அதன் 9 பிரத்தியேக ஷோரூம்களில் ஒன்றான நவ இந்தியாவில் அமைந்துள்ள அதன் 5 ஆவது ஷோரூமை முழுவதுமாக புதுப்பித்து மீண்டும் திறந்துள்ளது. 

இந்த கிளையை, இந்தியன் டெரைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரத் ராம் நரசிம்மன் மற்றும் இந்த கிளையின் பிரான்சைஸி அரவிந்த் முன்னிலையில் ஸ்ரீ குமரகுரு மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுஷ் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

நவ இந்தியா சிக்னலுக்கு எதிரே அமைந்துள்ள இந்த 1000 சதுர அடி கொண்ட கிளை சமகால ரசனைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது. அணைத்து 'இந்தியன் டெரைன்' ஷோரூம்களும் இதே போல படிப்படியாக புதுப்பிக்கப்படவுள்ளது.  

திறப்பு விழாவிற்கு அடுத்து செய்தியாளர்களிடம் சரத் ராம் நரசிம்மன் பேசுகையில், சென்ற நிதியாண்டில் இந்தியன் டெரைன் ரூ.460 கோடி வருவாய் ஈட்டியதாகவும், நிகழும் நிதியாண்டில் அதை விட 10% கூடுதலாக வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

கடைகள் மூலமாக மட்டுமல்லாது, ஆன்லைன் மூலமாகவும் இந்நிறுவனத்தின் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற மொத்தம் விற்பனையில் ஆன்லைன் மூலமாக மட்டும் 15% விற்பனை நடைபெற்றதாக சரத் ராம் நரசிம்மன் தெரிவித்தார். 

விரிவாக்கம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் தற்போது 'இந்தியன் டெரைன்' நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 200 பிரத்தியேக ஷோரூம்கள் உள்ளதாகவும், வரும் நாட்களில் வேகமாக விரிவாக்க திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார். இந்த ஆண்டில் மட்டும் 30 புது ஷோரூம்களை திறக்க திட்டமுள்ளதாக கூறிய அவர், இதில் 20 முதல் 25 கிளைகள் இந்தியாவின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் அமையும் என்றார். 

கோவை சந்தை பற்றி  அவர் பேசுகையில், கோவையில் மட்டும் 'இந்தியன் டெரைன்' நிறுவனத்திற்கு 9 பிரத்தியேக கிளைகள் உள்ளது எனவும் கோவையை தவிர திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் ஆகிய கொங்கு மண்டல பகுதிகளில் வலுவான வரவேற்பு 'இந்தியன் டெரைன்' னுக்கு உள்ளதாக கூறினார். 

"இந்த மண்டலத்தில் மட்டும் எங்களுக்கு 20க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இப்படிப்பட்ட ஒரு வலுவான நிலை எங்களை போன்ற வேறு எந்த பிராண்டுகளுக்கும் இல்லை. இந்த பகுதிகளில் உள்ள மக்களின் பொருட்களை நுகரும் திறன் எந்தளவு வலுவாக உள்ளது என்பதை நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துவிட்டோம்," என கூறினார்.

-சீனி, போத்தனூர்.

Comments