சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை!! களத்தில் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
‘எழும்பூர், டவுட்டன், கே.என்.கார்டன், படாளம், புதிய அரண்மனை சாலை, ஓட்டேரி இடது பாலம், கான்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்யா நகர் தங்குமிடம் ஆகிய பகுதிகளையும், பாடி பாலம் வழியாக பாபா நகர், ஜிகேஎம் காலனி, ஜவஹர் நகர் வழியாக காகித ஆலை சாலை ஆகிய பகுதிகளையும் முதல்வர் பார்வையிடுகிறார்’ என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இன்று காலை 10.30 மணிக்குத் தனது ஆய்வைத் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வேப்பேரி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, பொதுமக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, மழையால் மின்சாரம் இல்லை, வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்று முதல்வரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
முதல்வருடன், அமைச்சர்கள் கே.ன்.நேரு, சேகர்பாபு, தமிழ்நாடு காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு,சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, மழை வெள்ளத்தைத் துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதுமட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.
- பாரூக்.
Comments