புதுக்கோட்டை அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் சாவு! போட்டியை பாதியில் நிறுத்த உத்தரவு!
தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அறிவித்திருந்தபடி மஞ்சுவிரட்டு போட்டி காலை 10மணிக்குத் துவங்கியது.
இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட காளைகளும் 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ள இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
மாடுகள் ஏற்றிவந்த வாகனங்கள் 5கிமீ தூரத்திற்கு வரிசையாக நின்றன. இந்நிலையில், மாடுகள் முட்டியதில் 90க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே தொடர்ந்து நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் கருப்பையா என்பவர் உயிரிழந்தார். எனவே, சம்பவ இடத்தில் இருந்த வட்டாட்சியர், உடனடியாக மஞ்சுவிரட்டை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
-ராயல் ஹமீது.
Comments