பிரான்மலையில் பணிபுரிந்த ஆசிரியருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் சரவணன்(48). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ₹.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹.2 லட்சம் நிவாரணமாக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.
- அப்துல்சலாம், ராயல் ஹமீது.
Comments