"தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது"!! சீத்தாராம் யெச்சூரி.
கோவை:தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்தாண்டு கொரோனா காலத்தில் 15 கோடி பேர் வேலை இழந்தனர் எனவும், அதேசமயம் பெருநிறுவனங்கள் மேலும் பெரியதாகி வருகிறது எனவும் தெரிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையிலும், மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை எனவும், மத்திய அரசிற்கு எதிராக பேசுபவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
பாஜக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் அதிமுக அரசு ஆதரவளித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் 5 மாநில தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செல்ல முடியாது எனவும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சசிகலாவின் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு பாஜக பின்புலமாக இருக்கலாம் எனவும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது எனவும் அவர் தெரிவித்தார். அதிமுக பாஜகவின் இளைய பங்காளி போல செயல்பட்டு வருகிறது எனவும், பெட்ரோல் விலை உயர்வினால் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால் பெட்ரோல் பங்குகளில் மோடியின் புகைப்படம் அகற்றப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
- சீனி,போத்தனூர்.
Comments